இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாவார் ஜெ. – தமிழருவி மணியன்
சென்னை: ஆரவார அரசியலை விடுத்து, சொந்த நலன்களுக்காக பொய்யாய்ப் புகழ்பாடும் நடிப்புச் சுதேசிகளை விலக்கி, அனைவரும் எளிதில் அணுகுமாறு எளிமையும் கனிவும் பணிவும் மிக்க முதல்வராகத் தன்னை அவர் சரியாகச் செதுக்கிக் கொண்டால் இறுதி நாள் வரை இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக ஜெயலலிதாவால் விளங்குவார் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெங்களூரு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிக்கலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்புரைத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு சரியா தவறா என்ற விமர்சனத்தில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை.

ஜெயலலிதாவின் அரசியல் வீழ்ச்சி எழமுடியாமல் வீழ்ந்து கிடக்கும் தி.மு.கழகத்தின் மறு எழுச்சிக்கு வித்திடலாகாது என்பதுதான் பெரும்பான்மை மக்களின் கவலையாக இருக்கிறது. ஜெயலலிதா நீதிமன்றத்தின் பிடியிலிருந்து இன்று மூன்றாவது முறையாக விடுபட்டிருக்கிறார்.
2001ல் சென்னை உயர்நீதிமன்றம் டான்சி நிலபேரம், கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே விடுதி விவகாரம் ஆகியவற்றிலிருந்து அவரை விடுவித்தது. மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் அவரது செயலைக் கண்டித்து குற்றத்தின் பிடியிலிருந்து இரண்டாவது முறை விடுவித்தது. இப்போது பெங்களூரு நீதிமன்றம் மூன்றாவது முறையாக அவருக்கு அரசியல் மறுவாழ்வை அளித்திருக்கிறது.
மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமரவிருக்கும் ஜெயலலிதா இனியாவது தன்மீது கோடிக்கணக்கான தமிழக மக்கள் கொண்டிருக்கும் நல்லன்பை நெஞ்சில் நிறுத்தி ஆத்ம சோதனையில் ஈடுபட்டு நல்லாட்சியை வழங்க முயல வேண்டும்.
வாக்கு வங்கியை விரிவாக்க இலவசத் திட்டங்களை அள்ளித் தெளித்து அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் 50,000 கோடி ரூபாயை விரயப்படுத்தும் தவறான அணுகு முறைக்கு அவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநிலத்து மக்கள் அனைவருக்கும் கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டை மட்டும் இலவசமாக்கி மற்ற இலவசத் திட்டங்களை முற்றாகக் கைவிட வேண்டும்.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கி அவற்றுக்கு வேண்டிய நிதியை ஒதுக்கவும் இரண்டு லட்சம் கோடிக்கும் மேற்பட்ட அரசின் கடன் சுமையைக் கணிசமாகக் குறைக்கவும், நாற்றமெடுக்கும் இன்றைய ஊழல் நிறைந்த நிர்வாகத்தை மாற்றி அமைக்கவும், அடித்தட்டு மக்களை மிக மோசமாகச் சீரழித்துச் சிதைத்து விட்ட டாஸ்மாக் கடைகளை உடனே மூடவும் ஜெயலலிதா முன்வர வேண்டும்.
ஒரு துறவியின் வாழ்நெறியோடு, கூடாநட்பைத் தவிர்த்து, ஆரவார அரசியலை விடுத்து, சொந்த நலன்களுக்காக பொய்யாய்ப் புகழ்பாடும் நடிப்புச் சுதேசிகளை விலக்கி, அனைவரும் எளிதில் அணுகுமாறு எளிமையும் கனிவும் பணிவும் மிக்க முதல்வராகத் தன்னை அவர் சரியாகச் செதுக்கிக் கொண்டால் இறுதி நாள் வரை இந்திய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக ஜெயலலிதாவால் விளங்கக்கூடும். ஆனால் ஜெயலலிதா இந்த நல்ல மனமாற்றங்களுடன் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமருவாரா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி என்று தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications