இன்று தஞ்சையில் ஒரே நேரத்தில் ஜெ., ஸ்டாலின் பிரச்சாரம்: பரபரக்கும் கட்சியினர்
தஞ்சாவூர்: முதல்வர் ஜெயலலிதா இன்று தஞ்சையில் பிரச்சாரம் செய்யும் அதே நேரத்தில் அங்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினும் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 8 நாட்கள் தான் உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அப்போது தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் 18 அதிமுக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். ஜெயலலிதா சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை வருகிறார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி தஞ்சையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் கூட்டம் நடக்கும் அதே நேரத்தில் தஞ்சையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிக்க உள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
தஞ்சை மற்றும் திருவையாறில் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின் இன்றும் தஞ்சையில் பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதாவும், ஸ்டாலினும் ஒரே நேரத்தில் தஞ்சையில் பிரச்சாரம் மேற்கொள்வதால் அங்குள்ள கட்சியினர் பரபரப்பாக காணப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications