21 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 21 தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது அவர்களைத் துன்புறுத்தி, கைது செய்வதில் இலங்கை ராணுவம் புதிய வழிமுறையைக் கடைப்பிடித்து வருவதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். மோசமான வானிலை காரணமாக நடுக்கடலில் நிற்கும் தமிழக மீனவர்களின் படகுகள், இயந்திரக் கோளாறால் நிற்கும் படகுகளையும் இலங்கை ராணுவத்தினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

புதிய கைது நடவடிக்கை
இயந்திரப் பழுதால் நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களைக் காப்பாற்றச் செல்லும் பிற மீனவர்களையும் கைது செய்வதுடன், அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்யும் புதிய உத்தியை இலங்கை ராணுவம் கடைப்பிடித்து வருகிறது. இலங்கையின் இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் மீட்புப் பணிகளுக்கு முற்றிலும் எதிரானது.

தத்தளித்த மீனவர்கள்
தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில், அண்மையில் நடைபெற்ற சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடித் தளத்தில் இருந்து கடந்த 8-ஆம் தேதியன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் படகானது, இயந்திரப் பழுது காரணமாக நடுக்கடலில் நின்றது. அப்போது, மீனவர்களைக் கைது செய்து அவர்களின் படகையும் இலங்கை ராணுவம் பறிமுதல் செய்துள்ளது. அவர்கள் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அறிகிறேன். ஏற்கெனவே, கடந்த 1, 2-ஆம் தேதிகளில் நடைபெற்ற சம்பவங்களில் 15 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஒரு படகும் இலங்கை வசமுள்ளது.
ஏழை மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பது அவர்களுடைய படகுகள் மட்டுமே. அவற்றையும் பறிமுதல் செய்து வைத்துக் கொள்ளும் நடவடிக்கையை இலங்கை ராணுவம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இது, தமிழகத்தில் உள்ள மீனவர்கள் மத்தியில் விரக்தியையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

63 படகுகள்
இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் 63 படகுகளும் போதிய பராமரிப்பின்றி பாழ்பட்டு வருகின்றன. எனவே, வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே அந்தப் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால், அவை கடுமையான சேதத்துக்கு உள்ளாக நேரிடும்.

கச்சத்தீவு
இந்தச் சம்பவங்களின் பின்னணியுடன், கச்சத்தீவு விவகாரத்தின் முக்கியத்துவத்தை தங்களுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்த விரும்புகிறேன். இந்தியா-இலங்கை இடையே கடந்த 1974, 1976-ஆம் ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். அந்த ஒப்பந்தங்களை செல்லாததாக்க அறிவிக்க வேண்டுமென வழக்கில் குறிப்பிட்டுள்ளேன்.

தமிழக அரசின் நிலை இதுவே
கச்சத்தீவு என்பது புவியியல் ரீதியாகவும், கலாசார, வரலாற்றுரீதியாகவும் இந்தியாவின் ஒரு பகுதியே என்பது தமிழக அரசின் நிலைப்பாடாகும். எனவே கச்சத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் உரிமையை மீட்டெடுத்து, அந்தப் பிரச்னைக்கு ஒரு நிலையான தீர்வைக் காண நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கு உரிய உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

21 மீனவர்கள்
மீனவர்களை விடுதலை செய்ய... இலங்கை ராணுவத்தினரால் கடந்த 9-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களுடன் சேர்த்து மொத்தம் 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்று, மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை வசமுள்ள மீனவர்களின் 64 படகுகளையும் விடுவிக்க வேண்டும்.

நிரந்தர தீர்வு
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான மிகவும் உணர்வுப்பூர்வமான இந்தப் பிரச்னையில் தங்களது தலைமையிலான மத்திய அரசு ஒரு உறுதியான, நிரந்தரத் தீர்வைக் காண வழிவகை செய்யும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications