வெள்ள நிவாரணம்: ஜெயலலிதாவிடம் ரூ.5 கோடி நிவாரண நிதி கொடுத்த ஜெயா டிவி பிரபா
சென்னை: தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.96 கோடியே 54 லட்சம் நிதி சேர்ந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஜெயா டிவி சார்பில் ரூ.5 கோடி நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஜெயா தொலைக்காட்சியின் சார்பில் பிரபா சிவகுமார் ரூ.5 கோடியும், முருகப்பா குழும நிறுவன செயல் தலைவர் ஏ.வெள்ளையன் ரூ.5 கோடியும் என ரூ.10 கோடியை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.96 கோடியே 53 லட்சத்து 67 ஆயிரத்து 634 வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
யார் இந்த பிரபா சிவகுமார்
ஜெயா டிவியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரபா சிவகுமார், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகளாவார். பிரபாவதி என்ற பிரபாவின் கணவர் சிவகுமார், டாக்டராக இருக்கிறார். திருச்சி அருகே உள்ள ஊரைச் சேர்ந்த சிவக்குமார் போயஸ் கார்டனில் மன்னார்குடி ரத்த சொந்தம் இல்லாத ஒரே நபர் என்றால் அது டாக்டர் சிவகுமார்தான் என்கின்றனர்.