செங்கோட்டை வீரவாஞ்சிநாதன் மணிமண்டபம்.. ஜார்ஜ் கோட்டையிலிருந்து திறந்து வைத்த ஜெ.
செங்கோட்டை: செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வீர வாஞ்சிநாதன் மணிமண்டபத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.
இந்திய சுதந்திரத்திற்காக முதன் முதலில் ஆயுதம் ஏந்திஅப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ் துரையை மணியாச்சி ரயில்நிலையத்தில் வைத்து 17.6.1911ம் ஆண்டு சுட்டுக் கொன்றுவிட்டு தங்களது திட்டம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்க்காகவும்,தனது கூட்டாளிகள் யாரையும் காட்டி கொடுத்து விடக் கூடாது என்பதற்க்காக அந்த ரயிலின் கழிவறைப் பெட்டியில் போய் தன்னை தானே சுட்டு தானும் களச்சாவு அடைந்தவர் வீர வாஞ்சிநாதன்.

செங்கோட்டையை சார்ந்த வீரவாஞ்சிநாதனின் தியாகத்தை போற்றும் வண்ணம் அப்போதைய முதல்வர் காமராஜர் செங்கோட்டை முத்து சாமி பூங்காவில் வீரவாஞ்சி நாதனுக்கு மணி மண்டபம் அமைக்க 8.8.1957 ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
வாஞ்சியின் தியாகத்தை போற்றி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.17.6.1986 ம் ஆண்டு செங்கோட்டையில் வீர வாஞ்சிநாதனின் உருவச் சிலையை திறந்து வைத்தார். அப்போதே வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்கும் கோரிக்கை எழுந்தது.
அதன் பின் அதனை அனைவரும் மறந்த நிலையில் இப்பகுதி மக்கள்,வாஞ்சி இயக்கம்,என பல்வேறு அரசியல் கட்சிகள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்ததைத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் ரூபாய் 50இலட்சம் செலவில் வீர வாஞ்சி நாதனுக்கு மணிமண்டபம் அமைக்க முடிவு செய்து நிதியும் ஒதுக்கப் பட்டன.
ஆட்சி மாற்றத்தின் காரணமாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு பின் குறிப்பிட்ட நாட்களில் பணிகளை தொடங்கி விரைவாக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டன. பின் திறப்பு விழா தள்ளிப் போன நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே திறப்பு விழாவுக்கு காத்திருந்த மணிமண்டபத்தை தமிழக முதல்வர் இன்று மதியம் மதியம் 12.55க்கு மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலகத்திலிருந்து திறந்து வைத்தார்.
செங்கோட்டையில் மாவட்ட வருவாய்அலுவலர் உமாமகேஸ்வரி, வீர வாஞ்சிநாதனின் தம்பி கோபாலகிருஷ்ணன் மகன் ஹரிஹர சுப்பிரமணியன், வாஞ்சி இயக்கத் தலைவர் ராமநாதன்,மாவட்ட அதிமுக செயலாளர் முத்துக்கருப்பன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரையப்பா, பி.ஜி.இராஜேந்திரன், செங்கோட்டை நகரமன்ற தலைவர் மோகன கிருஷ்ணன், துணைத்தலைவர் கணேசன், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், துணை செயலாளர் நடராஜன், சாம்பவர் வடகரை பேருராட்சி மன்ற துணைத் தலைவர் வீ.பி.மூர்த்தி, கண்காணிப்புக் குழு உறுப்பினர் சண்முக சுந்தரம், செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேல்,துணை செயலாளர் ராஜா, நகரமன்ற உறுப்பினர்கள் திலகர், பத்மாவதி, ஐயப்பன், செந்தில் ஆறுமுகம், ராஜகோபால், கு.ராஜேஷ்வரன், ராம் மோகன், ராஜ் உள்ளிட்டோர் வீரவாஞ்சிநாதன் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் செல்வராஜ், பரமசிவம், இசக்கி முத்து, ராம கிருஷ்ணன், வருவாய்த் துறை அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
முடிவில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மாரியப்பன் நன்றி கூறினார்.












Click it and Unblock the Notifications