ஐ.எஸ்.எல் தொடக்கவிழாவில் ரஜினிக்கு கிடைத்த அப்ளாஸ்... அப்செட் ஆனாரா ஜெயலலிதா?!.
சென்னை: "பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல..." என்று சிவாஜி படத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை தூக்கிப் போட்டு பிடித்து வசனம் பேசுவார் ரஜினி. அப்போது ரசிகர்கள் எழுப்பும் கரவொலியால் தியேட்டரே அதிரும். அதேபோல ஒரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இது திரையில் வந்த ரஜினியைப் பார்த்து அல்ல... ஐ.எஸ்.எல் தொடக்க விழா தினத்தன்று நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்த ரஜினியைப் பார்த்துதான் அரங்கமே அதிர்ந்தது.

கொல்கத்தா, சென்னை, டெல்லி டைனமோஸ், புனே சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், மும்பை எப் சி, நார்த்ஈஸ்ட் யுனைட்டட், எப்.சி கோவா ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் ஐஎஸ்எல் கால்பந்து தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்கவிழா நடைபெற்ற அக்டோபர் 2ம் தேதியன்று ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி தொடக்க விழாவில், ரஜினிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

திறந்த ஜீப்பில் கையில் கால்பந்துடன் ஸ்டைலாக வந்த ரஜினி... மேடையில் துள்ளிக்குதித்து ஏறியது கண்டு அங்கிருந்த சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், ஐஎஸ்எல் நிர்வாகி நீட்டா அம்பானி, ஆகியோர் அசந்துதான் போனார்கள். ரஜினிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமும், கிடைத்த வரவேற்பும் ஆளும்கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்திவிட்டதாக பேசிக்கொள்கின்றனர்.


ரசிக்காத அரசு
சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்காத ‘அம்பானி' நிறுவனத்தின் ஆசியுடன் இயங்கும் கால்பந்து போட்டிக்கு தமிழக அரசு விளையாட்டுத் துறை அளித்த ஒத்துழைப்பும், ஆளும் அதிமுக அரசின் தலைமை ரசிக்கவில்லையாம், அதன் விளைவாகவே விளையாட்டுத் துறை செயலாளர் ஹேமந்த்குமார் சின்ஹா, தமிழ்நாடு மேம்பாட்டு ஆணைய உறுப்பினரும் செயலருமான சம்பு கல்லோலிகர் என்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளும் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.













Click it and Unblock the Notifications