மாடியில் வசிக்கும் கமல்... ஏழைகளுக்கு வழங்கும் உதவியை நிறுத்த சொல்கிறாரா? - அமைச்சர் ஜெயக்குமார்
அரசிற்கு நிதி நெருக்கடி இருந்தாலும் கூட வேட்டி, சேலை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: மாடி மேல் இருந்து பார்க்கும் கமல் போன்றவர்களால் மக்கள் கஷ்டத்தை அறிய இயலாது என்றும் குடிசைகளில் இருந்து மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் என்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மயிலாப்பூரில் வேட்டி,சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பொங்கல் பரிசு பைகளை வழங்கினார் அமைச்சர் ஜெயக்குமார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே மக்களுக்கு கொடுக்கும் விலைமதிப்பில்லாத பொங்கல் பரிசு என்று கமல் கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இலவச வேட்டி சேலை திட்டம், சைக்கிள், லேப்டாப் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் கமல் நிறுத்தச் சொல்கிறாரா?
மாடி மேல் இருந்து பார்க்கும் கமல் போன்றவர்களால் மக்கள் கஷ்டத்தை அறிய இயலாது என்றும் குடிசைகளில் இருந்து மக்களை சந்திப்பவர்கள் நாங்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அது ஜெயலலிதாவின் தொகுதி. அங்கே ஆயிரக்கணக்கான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் வாக்குகளை கொள்ளையடித்து விட்டனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.