ஜெயக்குமார் எங்கேயும் தாவலை..!
ஜெயக்குமார் சசிகலா அணியிலிருந்து ஓ.பி.எஸ் அணிக்குத் தாவவில்லை என்பு உறுதியாகியுள்ளது.
சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு வரப் போவதாக கூறப்பட்ட நிலையில் அவர் போயஸ் தோட்டத்தில் இன்று பேட்டி கொடுத்துள்ளார்.
சசிகலா தரப்பில் உள்ள முக்கிய அமைச்சர்களில் ஜெயக்குமாரும் ஒருவர். இவர் திடீரென மாயமாகி விட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. நேற்று சசிகலா கூவத்தூர் போன போது இவர் கூடப் போகவில்லை. இதனால் இவர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு போகப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று திடீரென ஜெயக்குமார் போயஸ் தோட்டத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். இதனால் அவர் அணி மாறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூவத்தூரில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை இன்றும் சசிகலா சந்திக்கிறார். இன்று மாலைக்குள் ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டம் நடத்துவது பற்றி கட்சித் தலைமை முடிவு எடுக்கும் என்று ஜெயக்குமார் கூறினார்.
இதன் மூலம் அதிமுக போராட்டத்திற்குத் தயாராகி வருவது தெரிய வந்துள்ளது. என்ன மாதிரியான போராட்டத்தில் சசிகலா ஈடுபடப் போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.