ராஜீவ் வழக்கில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது: ஹைகோர்ட்டில் தமிழக அரசு புதிய மனு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என்று தற்போதைய நிலைப்பாட்டைத் தமிழக அரசு புதிய மனுவாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 2012ஆம் ஆண்டு தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய நிலைகுறித்து மத்திய, மாநில அரசுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மத்திய அரசு மறுப்பு
இந்த வழக்கில் சிறையில் உள்ள ஜெயக்குமார், ராபர்ட் பயஸை விடுவிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சகம் பதில் மனுத்தாக்கல் செய்தது. மேலும், ஆயுள் தண்டனை என்பதே வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டும் என்பதுதான். எனவே, இவர்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியது தான் என்று மத்திய அரசு தெரிவித்தது.
2012ல் நிலைப்பாடு
இதேப் போன்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என்று திட்டவட்டமாக தமிழக அரசு கூறியுள்ளது. 2012ம் ஆண்டு உள்துறை செயலாளராக இருந்த ராஜகோபாலன் பெயரிலேயே பதில் மனுவைத் தமிழக அரசு நீதிமன்றத்தில் அளித்தது.
புதிய மனு
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என்று தற்போதைய நிலைப்பாட்டைத் தமிழக அரசு புதிய மனுவாகத் தாக்கல் செய்துள்ளது.