கோட்டைக்கு போகச் சொன்ன முதல்வர்- மருத்துவமனையை விட்டு வெளியேறும் அமைச்சர்கள்
சென்னை : சிகிச்சை முடிந்துவிட்டது. வீடு திரும்பப் போகிறேன். அமைச்சர்களை அலுவலகப்பணியை போய் கவனிக்கச் சொல்லுங்கள் என்று முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து மருத்துவமனையில் இருந்து அமைச்சர்கள் கோட்டைக்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. நேற்று நள்ளிரவு அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அப்பல்லோ மருத்துவமனை அமைந்திருக்கும் கிரீம்ஸ் ரோட்டில் இன்று காலை முதலே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகளின் கார்கள் மட்டுமே அந்த சாலையில் அனுமதிக்கப்படுகிறது.

அதிமுக தொண்டர்கள் பல்வேறு தடுப்புகளையும் தாண்டி வெவ்வேறு வழிகளில் கிரீம்ஸ் சாலைக்குள் நுழைந்து, அப்பல்லோ மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர்.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருப்பது அப்பல்லோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் எம்.சி.சி.ஏ. பிரிவில் பிளாக் எண் 2008இல். ஜெயலலிதாவுடன் நேற்றிரவு ஆம்புலன்ஸில் வந்தவர் சசிகலா மட்டுமே. அவர் மட்டும்தான் அப்போது உடன் சென்றார். இருதய நிபுணர் ஒய்.சி.பி. ரெட்டி மற்றும் டாக்டர் சத்தியமூர்த்தி தலைமையிலான மருத்துவக்குழுதான் சிகிச்சையளித்து வருகிறது.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்துக்குள் அந்த தளத்தில் உள்ள மற்ற நோயாளிகளை எல்லாம் உடனடியாக வேறு தளத்துக்கு மாற்றிவிட்டது மருத்துவமனை நிர்வாகம். காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், பெருநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் அப்பல்லோ மருத்துவமனையை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டது.

புதிதாக இன்று வந்த புறநோயாளிகள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல உள்ளே தங்கியிருக்கும் நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்களுக்கும் இன்று அனுமதி இல்லை.
தமிழக அமைச்சர்கள் அத்தனை பேரும் அப்பல்லோ மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களையும்கூட ஜெயலலிதா உள்ள இரண்டாவது தளத்துக்கு அனுமதிக்கவில்லை. அனைவருமே தரை தளத்தில் உள்ள வரவேற்பு அறையில்தான் அமர்ந்தபடியும், நடந்தபடியும் இருக்கிறார்கள்.

அப்போலோ மருத்துவமனை சாலையில் போக்குவரத்தை போலீஸார் நிறுத்திவிட்டனர். ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மருத்துவமனையின் உள்ளே, வெளியே போகமுடியாமல் போலீஸார் தடுத்தனர்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா குணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தற்போது அவரது உடல்நிலை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் குணமடைந்து விட்டதாகவும், தற்போது அவர் வழக்கம் போல உணவருந்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காலையில் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவை அவர் உண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இன்று காலை மருத்துவமனையில் கட்சிக்காரர்கள் குவிந்திருக்கும் நிலவரங்களை ஜெயலலிதா, மருத்துவமனை தரப்பினரிடம் கேட்டு தெரிந்துகொண்டாராம். உடனே உதவியாளரை அழைத்து, சாதாரண காய்ச்சல் தானே?, சிகிச்சை முடிந்துவிட்டது, வீடு திரும்ப போகிறேன். அமைச்சர்களை அலுவலகப்பணியை போய் கவனிக்கச் சொல்லுங்கள் என்று உத்தரவிட்டாராம்.
இதனையடுத்து உதவியாளர் மகாலிங்கம் அமைச்சர்களுக்கு தகவல் சொன்ன அடுத்த நிமிடமே, அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மருத்துவமனையை விட்டு கோட்டைக்கு கிளம்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications