கே.பாலசந்தர் மகன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்
சென்னை: டைரக்டர் கே.பாலசந்தரின் மகன் கைலாசத்தின் மரணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
கே.பாலசந்தருக்கு அவர் அனுப்பியுள்ள இரங்கல் கடிதத்தில், "தங்களின் அன்பு மகன் கைலாசம் 15.8.2014 அன்று உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த துயரமும், மனவேதனையும் அடைந்தேன்.
இந்தத் துயரச் சம்பவத்தினால் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுக்கு ஏற்பட்டுள்ள போதிலும், இந்தத் துயரத்தை தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அளிக்க வேண்டும் என்றும், கைலாசம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்திக்கிறேன்.
கைலாசத்தை இழந்து வாடும் தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று கூறியுள்ளார்.