ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வழக்கு.. மனுதாரருக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது பற்றி ஏன் போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் கூறவில்லை என்று, மனுதாரரிடம் ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, வழக்கறிஞர் செல்வவிநாயகம் என்பவர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரிடம் நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஜெயலலிதா மரணம் குறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தது ஏன்? என்றும், அந்த புகாரின் மீது நடவடிக்கை இல்லை என்று குற்றம்சாட்டும் நீங்கள், ஏன் உயர் அதிகாரிகளிடம் முறையிடவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உங்களது செயல்பாடுகளில் சுணக்கம் இருந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட 186 பேர் மீது எப்ஐஆர் பதியக்கோரி செல்வவிநாயகம் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.