ஜெயலலிதா கைதால்.. தமிழக முடிதிருத்தும் தொழிலாளிகள் பிஸி!
சேலம்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறையில் இருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ, முடி திருத்தும் தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியே. ஆனால் அவர் சிறையில் உள்ளதை நினைத்து வந்த மகிழ்ச்சி கிடையாது இது. அதிமுக தொண்டர்கள் செய்யும் மொட்டையடிப்பு போராட்டம்தான் இந்த மகிழ்ச்சிக்கு காரணம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, கடந்த மாதம் 27ம்தேதி முதல் ஜெயலலிதா பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு விரைந்து ஜாமீன் கிடைக்க வேண்டும், வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதிமுக தொண்டர்கள் பல வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டங்கள் பலவகை
உண்ணாவிரதம், மண்சோறு சாப்பிடுவது, கோயில்களில் அங்க பிரதட்சணம் செய்வது, தேங்காய் உடைப்பது போன்ற பல வகையான வேண்டுதல்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.
மொட்டையடிக்கும் போராட்டம்
இதன் ஒருவகை போராட்டம்தான் மொட்டை அடித்துக்கொள்வது. கும்பகோணம் அருகேயுள்ள சுவாமி மலை கோயிலில் அதிமுகவினர் 502 பேர் மொத்தமாக மொட்டையடித்து சுவாமியை வேண்டிக்கொண்டனர். இந்நிலையில் சேலத்தில் 1006 தொண்டர்கள் மொட்டையடித்து தங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளனர்.
மொட்டை பாஸ்
மொட்டை போட்டுக்கொண்டு கட்சி தலைமைக்கு தங்கள் விசுவாசத்தை காண்பிக்க தொண்டர்கள் அலைமோதுகிறார்கள். ஏனெனில் மொட்டை அடித்தால், அவர் போராட்டத்தில் பங்கேற்றது கட்சி நிர்வாகிகளுக்கு எளிதில் தெரிந்துவிடும். இதனால் கட்சி நன்மதிப்பையும் பெற முடியும். எனவே வேறு போராட்டங்களைவிட மொட்டை போராட்டத்திற்கு தொண்டர்கள் மத்தியில் ஏக கிராக்கி.
கருப்பு சட்டை..
மேலும் அதிமுக தொண்டர்கள் கருப்பு சட்டைகள் போட ஆரம்பித்துள்ளதால் கருப்பு சட்டை சேல்ஸும் களைகட்டி வருகிறது.