கருணாநிதி 'ஐடியா' கொடுத்த சில மணி நேரங்களில் இளங்கோவன் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த ஜெ.!
சென்னை: பிரதமர் நரேந்திரமோடியுடனான தனது சந்திப்பு குறித்து தரம் தாழ்ந்து விமர்சனம் செய்ததற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சென்னைக்கு, கைத்தறி தின விழாவிற்காக வந்திருந்த பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் தரம் தாழ்ந்த வகையில் பேட்டியளித்தார்.
இதையடுத்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில், ஜெயலலிதா சார்பில் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கறிஞர் ஜெகன் இன்று இளங்கோவனுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அதிமுகவினர் வன்முறைகளில் ஈடுபட கூடாது என்று கூறியதுடன், தேவைப்பட்டால் அவதூறு வழக்கு போடலாம் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு சில மணி நேரங்களில் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.