இந்தியாவை சர்வ வல்லமை படைத்த வல்லரசாக்கும் சக்தி படைத்தவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்
சென்னை: இந்தியாவை வல்லரசாக்கும் வல்லமை படைத்தவர் ஜெயலலிதா என அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
கடந்த திங்கள் கிழமையன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை மாநகரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டிகள், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழக்கும் விழா சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அண்டஹ் நிகழ்ச்சியில் சென்னையில் 100 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்து வரும் மூத்தக் குடிமக்கள் வரவழைக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக முதல்வர் பிறந்தநாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.
இந்த விழாவுக்கு தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமை தாங்கினார். தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் ரா.விஸ்வநாதன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி, சிறுபான்மையினர் துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
அப்போது விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது :-
கொண்டாட்டம்...
முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
நலத்திட்ட விழாக்கள்...
இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சி தலைவர்களின் பிறந்தநாள் விழா கொட்டாட்டங்களை போல் அல்லாமல், ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் முதல்வரின் பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
வல்லரசாக மாற்றும் சக்தி...
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக நல்ல பிரதமர் கிடைக்கவில்லை என்ற குறையை போக்கும் வகையில், இந்த நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவை சர்வ வல்லமை படைத்த வல்லரசு நாடாக உருவாக்கும் சக்தி பெற்ற ஒரே தலைவர் முதல்வர் ஜெயலலிதா தான் என்ற எண்ணத்தில், இந்தியா முழுவதும் கருத்து நிலவி வருகிறது. அந்த கருத்தை நனவாக்கும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில், தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்' என இவ்வாறு அவர் உரையாற்றினார்.
விழாவில் கலந்து கொண்டவர்கள்...
விழாவில், மாநிலங்கள் அவை உறுப்பினர் நா.பாலகங்கா, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ச.ராஜேந்திரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தலைவர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, எம்.எல்.ஏ.க்கள் கோகுல இந்திரா, வி.பி.கலைராஜன், கே.குப்பன், ஜி.செந்தமிழன், கே.பி.கந்தன், ஜே.சி.டி.பிரபாகர், எஸ்.வேதாச்சலம், நிலைக்குழு தலைவர்கள், நியமனக்குழு உறுப்பினர்கள், மண்டலக்குழு தலைவர்கள், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் முன்னதாக மேயர் சைதை துரைசாமி வரவேற்புரை ஆற்றினார். முடிவில் துணை மேயர் பெஞ்சமின் நன்றியுரை ஆற்றினார்.