எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள்: 24ம்தேதி நினைவிடத்தில் ஜெயலலிதா மலர் அஞ்சலி
சென்னை: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாளான 24ம் தேதி முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்ககள், கழக நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு தினத்தின் போது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்திருந்தார். ஜாமீனில் வெளிவந்து சென்னையில் இருந்த போதும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. போயஸ்கார்டன் இல்லத்திலேயே எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக உருவான தினமான அக்டோபர் 17ம் தேதி கட்சியினரை சந்திக்க தலைமைக்கழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோடநாட்டிற்கு சென்ற ஜெயலலிதா, அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களையும், அதிமுகவினரையும் முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்திக்கப் போகிறார் .












Click it and Unblock the Notifications