எம்.ஜி.ஆர் 27வது நினைவுநாள்… போயஸ் கார்டனில் அஞ்சலி செலுத்திய ஜெ. நினைவிடத்தில் வைகோ அஞ்சலி
சென்னை: எம்.ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
எம்.ஜி.ஆரின் 27 வது ஆண்டு நினைவுநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழர்களாலும் எம்.ஜி.ஆர் ரசிகர்களாலும் அனுஷ்டிக்கப்படுகிறது.
எம்ஜிஆர் மறைந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை. அவர் நடித்த படங்கள் வழியாக, அவர் வாயசைத்துப் பாடிய பாடல்கள் வழியாகத் தமிழ்ப் பாட்டாளிகள் சமூகம், எம்ஜிஆர் என்ற பிம்பத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

எம்.ஜி.ஆரைத் தங்கள் துயரங்களைத் தீர்க்கவரும் கடவுளாகத் திரையில் கண்டனர். இதுதான் எம்.ஜி.ஆர். என்னும் தனித் திரைப்பிம்பத்தை அரசியல் கட்சித் தலைவராகவும், இதயத் தெய்வமாகவும், தமிழக முதல்வராகவும் உயர்த்தியது. அவர் மறைந்து 27 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்றைக்கும் மக்களின் முதல்வராக வாழ்ந்து வருகிறார்.
போயஸ்கார்டனில்
அதிமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, போயஸ்கார்டனில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில்
எம்.ஜி.ஆரின் 27வது ஆண்டு நினைவு இன்று (புதன் கிழமை) மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அண்ணா தி.மு.க. அவைத் தலைவர் இ. மதுசூதனன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.அதனை தொடர்ந்து நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ஆண்டுதோறும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு நினைவுநாள் உறுதி மொழி ஏற்றபோது ஜெயலலிதா பிரதமராகவேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற ஜெயலலிதா, ஜாமீனில் வெளிவந்த பின்னர் எந்த ஒரு அரசியல் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் போயஸ்கார்டனிலேயே அஞ்சலி செலுத்தினார். எனவே எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மதுசூதனன் தலைமையில் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

வைகோ அஞ்சலி
தந்தை பெரியார் அவர்களின் 41ஆவது நினைவு நாளான இன்று தாயகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்பு எம்.ஜி.ஆர். அவர்களின் 27 நினைவுநாளையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இமயம் ஜெபராஜ், வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications