போயஸ்கார்டன் டூ விமான நிலையம்.. ஜெ. பயண பாதையில் குவிந்து மோடிக்கு மாஸ் காட்டிய அதிமுகவினர்!
சென்னை: பிரதமர் நரேந்திரமோடியை சென்னை விமான நிலையத்தில் ஜெயலலிதா வரவேற்க காரில் சென்றபோது சாலையின் இரு புறமும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். பிரதமருக்கு மாஸ் காட்டும் முயற்சியை போலவே இந்த நடவடிக்கைகள் தெரிந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
சென்னையில் நெசவாளர் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்த மோடியை ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்.

இதற்காக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா காரில் விமான நிலையம் சென்றார். இரு இடங்களுக்கும் சுமார் 15 கி.மீ தூரம் உள்ளது. ஆனால் சாலையில் இருபுறங்களிலும் அதிமுகவினர் கூடி நின்று ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்டனர். கைகளில் அதிமுக கொடிகளை அசைத்தனர்.

ஜெயலலிதா, மோடியை வரவேற்க நேரில் செல்வது காலையில்தான் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கே தெரியும். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் அறிந்து கொண்டு, சாலையின் இருபுறமும் குவிந்தது எப்படி என்பதில்தான், மாவட்ட செயலாளர்களின் மாயம் இருப்பதாக கூறுகிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள், நேற்று முதல், முழு வீச்சில் இறங்கி, அதிமுக தொண்டர்களை அழைத்து வந்து சாலையின் இருபக்கமும் நிறுத்தியிருந்தனர். இதனால், ஜெயலலிதா மகிழ்ச்சியடைவார் என்பதோடு, பிரதமர் மோடியும் இதையறிந்து வியப்பு கொள்வார் என்பது மா.செக்கள் திட்டம்.
பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி சேரும் வாய்ப்பு இருப்பதால், இந்த மாஸ் காட்டும் படலம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஜெயலலிதா தலைமைச் செயலகம் போகும்போது, இப்படி கூட்டம் கூடி வரவேற்பதில்லை என்பது இதில் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications