வெடிவெடிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: சாபம் விடும் சி.ஆர்.சரஸ்வதி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில் ஓபிஎஸின் ஆதரவாளர்கன் இதனை வெடிவெடித்து கொண்டாடி வருகின்றனர் என சிஆர்.சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடிவெடித்து கொண்டாடுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அவர்கள் 3 பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதில் பிரதான குற்றவாளியான ஜெயலலிதா காலமாகிவிட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் அணிக்கும் சசிகலாவுக்கும் மோதல் நிலவி வருகிறது.
இதனால் சசிகலாவுக்கு எதிரான இந்த தீர்ப்பை முதல்வர் ஓபிஎஸின் ஆதரவாளர்கள் வெடிவெடித்தும் சுவீட் கொடுத்தும் கொண்டாடினர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்திதொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி, ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அதனை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடிவெடித்து கொண்டாடுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக வநுதுள்ள இந்த தீர்ப்பை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசுகள், மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர் என்றும் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது என்றும், அதிமுக ஆட்சி விரைவில் மலரும் என்றும் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.