உழைப்பால் வெற்றியை உருவாக்கு... முயற்சியை அதற்கு எருவாக்கு... திருமணவிழாவில் ஜெ. பேச்சு
சென்னை : சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மக்கள் நலனில் அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசு மீது பொய்பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் இல்ல திருமணவிழா நடைபெற்றது.
இதில் மணமக்களை வாழ்த்திப் பேசிய ஜெயலலிதா, உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, நீங்கள் வளர்வது உங்களின் கையில்தான் உள்ளது என்றார். மற்றவர்களின் மனதை, இயல்பு புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
அதிமுக போன்ற மக்கள் இயக்கத்தை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது. மக்கள் நலனின் அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் அரசு மீது பொய் பிரசாரம் நடத்தி வருகின்றனர். அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல் வாழ்க்கையே பாடம் கற்றுக்கொடுக்கும். சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும். அதிமுக கட்சியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல், எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன என்றார்.
உழைப்பால் வெற்றியை உருவாக்கு... முயற்சியை அதற்கு எருவாக்கு... சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் வகையில் களப்பணியாற்ற வேண்டும். உங்களால் முடியாதது வேறு எவரால் முடியும்? என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.