14வது சட்டசபையின் இறுதி நாள்.. இல்லாத எதிர்கட்சியினருக்கும் நன்றி சொன்ன ஜெ.!
சென்னை: சென்னை : சட்டசபையில் விவாதங்கள் காரசாரமாக இருந்தாலும், காழ்ப்புணர்வு இல்லாமல் செயல்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
14 வது சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று முதல்வர் ஜெயலலிதா அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

இந்த 14வது சட்டசபையின் இறுதி கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் வளம் சேர்க்கும் அறிவிப்புகளை வெளியிட்டதில் பெரும் மன நிறைவு அடைகிறேன்.
இந்த 14-வது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களுடன் முதல்வர் என்ற முறையில் இணைந்து பணியாற்றியதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல சமயங்களில் விவாதங்கள் காரசாரமாக இருந்தாலும், காழ்ப்புணர்ச்சி இல்லாமல் செயல்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எனது நன்றியை தங்கள் வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டசபை என்பது மக்களாட்சியின் மகத்துவம் ஆகும். அனைத்து மக்களுக்கும் நன்மை புரிய நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு இது. இந்த சட்டசபையில் நடுநிலை தவறாது பணியாற்றிய சட்டப் பேரவைத் தலைவர் ப. தனபால் மற்றும் அவை முன்னவர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். ஜெயலலிதா நன்றி கூறிய போது எதிர்கட்சியினர் வரிசையில் திமுக, தேமுதிக உறுப்பினர்கள் யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, தேமுதிக உறுப்பினர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பாகவே அவையை புறக்கணிப்பதாக தெரிவித்து விட்டனர்.
14வது சட்டசபையின் கடைசி கூட்டத் தொடர் கடந்த 16ம் தேதி பட்ஜெட் உரையுடன் தொடங்கியது. எதிர்கட்சிகள் வெளிநடப்பு, சில நேரங்களில் வெளியேற்றம் என தினசரியும் அமளிதுமளியாகவே இருந்தது.
இந்த நிலையில் சபரீசன் பற்றி அதிமுக எம்.எல்.ஏ சட்டசபையில் பேசியதற்கு திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளை புறக்கணிக்கப் போவதாக கட்சித்தலைவர் கருணாநிதி இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இதேபோல சட்டசபை எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் சட்டசபைக்கு வரவேயில்லை. தேமுதிகவினரும் அவையை கடந்த இரு தினங்களாக புறக்கணித்து விட்டனர்.
காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சி உறுப்பினர்கள் மட்டுமே கடைசி நாளான இன்று சட்டசபைக்கு வந்திருந்தனர்.
திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவான திமுக தலைவர் கருணாநிதி, கடந்த 5 ஆண்டுகளாக ஒரு நாள் கூட சட்டசபை விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை. சில நேரங்களில் லாபி வரைக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு சென்று விடுவார்.
இனி இந்த உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்று சட்டசபைக்கு வருவார்களா? ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வருவாரா? அல்லது எதிர்கட்சித் தலைவராக எதிர் வரிசையில் அமர்வாரா?












Click it and Unblock the Notifications