ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் மர்மம்.. வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஸ்டாலின்
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதை தானும் வலியுறுத்துவதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியது: புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில், மாநகராட்சி மீட்பு நடவடிக்கைகள் போதவில்லை. எனவே, சென்னையில் மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. சாலையில் விழுந்த மரங்களை மாநகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும்.
புயல் நிவாரண பணிக்காக, மத்திய அரசு ஒதுக்கிய ரூ500 கோடி போதுமானது அல்ல. வந்துள்ள நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்று சேர உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். முறைகேடுகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்.
ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்க திமுக விரும்பவில்லை. ஆனால் ஜெயலலிதா சிகிச்சை குறித்து உரிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனவே பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியதை போல, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.