ஈஸ்டர் பண்டிகை: ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ் வாழ்த்து!
சென்னை: ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா வாழ்த்து
தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் தேவ குமாரனாம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய திருநாளில் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவிட வேண்டும், பகைவரிடத்தும் அன்பு காட்ட வேண்டும் என்று போதித்த இயேசுபிரான், சிலுவையில் அறையப்பட்டு பின்பு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்களது புனித நூலான பைபிளின் வாசகங்களை வாக்கிலும், மனதிலும் நிலைநிறுத்தியவர்களாய் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனைகள் செய்து கர்த்தராகிய இயேசு பிரானை வழிபடுவார்கள்.
ஆண்டவனின் பிள்ளைகளாகிய மக்கள் அனைவரும் மனிதநேயம் கொண்டவர்களாய் அன்புடனும், சகோதரத்துவ உணர்வுடனும் பிறருக்கு துன்பங்கள் இழைத்திடாமல் வாழ்ந்து, எப்போதும் பிறரது துயரங்களைக் களைந்திட முயற்சி செய்திட வேண்டும் என்ற இயேசுபிரானின் உயரிய போதனைகளைப் பின்பற்றி நடந்திட உறுதி மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாநிதி வாழ்த்து
திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இயேசு பெருமான், கொடியோர் இழைத்த துன்பங்களில் இருந்து விடுதலை பெற்று மீண்டெழுந்தார் எனக்கூறி, அந்நாளை கிறித்துவ சமுதாய உடன்பிறப்புகள், "ஈஸ்டர்" எனும் இன்பத்திருநாளாகக் கொண்டாடி மகிழ்வர்.
இந்த ஆண்டின் ஈஸ்டர் திருநாளை 20.4.2014 ஞாயிறு அன்று கொண்டாடி மகிழ்ந்திடும் கிருத்துவ சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று கூறியுள்ளார்.
வைகோ வாழ்த்து
இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர். மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்ட இயேசு, தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து சபையில் நிறுத்தப்பட்டார். சதிகாரர்களின் காட்டுக் கூச்சலால் வேறு வழி இன்றி, இயேசுவை சிலுவையில் அறையுமாறு ஒப்புக் கொடுத்தான்.
மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். கொடியவன் ராஜபக்சே கூட்டம் அனைத்துலக நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும் எனும் நம்பிக்கையோடு, ஈழத்தமிழரின் துன்பத்தைப் போக்கவும், சுதந்திர தமிழ் ஈழ தேசத்தை மலர்விக்கவும், இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும். அன்பையும் கருணையையும் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
ராமதாஸ் வாழ்த்து
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே ஆகவேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. இயேசு பிரானின் வாக்குப்படி, தமிழக மக்கள் எதிர்கொண்டுவரும் சிரமங்கள் அனைத்தும் வெகுவிரைவில் நீங்கி, விடிவுகாலம் பிறக்கும் என்ற புதிய நம்பிக்கையுடன் இந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாட வாழ்த்துகிறேன்.
ஏழைகளை நேசிப்போம். மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்தி அன்புள்ளவர்களாக வாழ்வோம் என இந்த நன்னாளில் சூளுரைத்துச் செயல்படுவோம் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
விஜயகாந்த் வாழ்த்து
இதேபோல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
மனித குலத்தை வாழ்விக்க இறை தூதர் இயேசு நாதர் மீண்டும் உயிர்த்தெழுந்த நன்னாள் ஈஸ்டர் திருநாள் ஆகும். நாம் செய்கின்ற தொண்டும், தியாகமும் வீண் போகாது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்நாளில் கிறிஸ்த்துவ சமுதாயத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும் தேமுதிக சார்பில் எனது நெஞ்சார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்று கூறியுள்ளார்.