ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் வெற்றி செல்லுமா, செல்லாதா? இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா பெற்ற வெற்றி செல்லாது என தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஹைகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை: சட்டசபை தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வெற்றிபெற்றதாக அறிவித்ததை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட ஒரு வழக்கில் பதிலளிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவை, ஆர்.கே.நகரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பிரவீணா ஹைகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர், வாக்கு சேகரிக்க சரியான அல்லது சமமான வாய்ப்பு அளிக்கவில்லை எனவும், அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் பிரசாரம் செய்ய சுயேட்சை வேட்பாளர்களுக்கு உரிய அனுமதியை தேர்தல் அதிகாரிகள் அளிக்கவில்லை எனவும், அதிகாரிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டனர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த காரணங்களை வைத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று பிரவீணா தனது மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி எம்.துரைசாமி, இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க புதிய நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் இன்னும் ஆணையத்திற்கு சென்றடையவில்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications