ஜெயலலிதாவின் கால்களை அகற்றவில்லை... உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவில்லை- அப்பல்லோ மருத்துவர்கள்
ஜெயலலிதாவிற்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யவில்லை, அவரது கால்கள் அகற்றப்படவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி விளக்கம் அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை என்று தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு வதந்திகள் நிலவுகின்றன. அவருடைய பற்கள், கால்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் பரவி வருகின்றன. இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரிச்சர்ட் பியல் ஆகியோர் இன்று விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதா மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே செய்தியாளர் சந்திப்பு என மருத்துவர் ரிச்சர்ட் பியல் விளக்கம் அளித்தார். மேலும் மருத்துவ முறைகளுக்கு உட்பட்டே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் லண்டன் மருத்துவர் தெரிவித்தார்.
காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு ஜெயலலிதா அழைத்து வரப்பட்ட போது சுயநினைவுடன்தான் இருந்தார். அவருக்கு நுரையீரல் இதயத்தில் நோய் தொற்று ஏற்பட்டதாகவும், நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்ததன் காரணமாகவே அவர் சுயநினைவை இழந்தார் என்றும் தெரிவித்தனர்.
டிரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர்தான் அவர் சுயநினைவுக்கு வந்தார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதாவிற்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. அவரது கால்களை அகற்றவில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது பற்களை அகற்றவில்லை என்று சுதா ஷேசய்யன் தெரிவித்தார்.