ஜெயலலிதா இன்னும் ஒரு சில நாட்களில் தனி வார்டுக்கு மாற்றம்
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது ஜெயலலிதாவின் உடல்நிலை வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. அவர் மன மற்றும் உடல் ரீதியாக நலமாக இருப்பதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி சமீபத்தில் கூட பேட்டியளித்தார்.
தற்போது ஒரு நாளைக்கு 20 மணி நேரத்துக்கும் மேலாக குறிப்பாக, காலை தொடங்கி நள்ளிரவு வரை அவர் நன்றாக மூச்சுவிடுகிறார் என்றும், அவரது உடல்நிலை முன்னேற தொடங்கி உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூங்கும் நேரத்தில் மட்டுமே செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறதாம். ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டு வரும் வேகமான முன்னேற்றத்தால் மகிழ்வடைந்துள்ள டாக்டர்கள், அவருக்கு செயற்கை சுவாசத்தை முழுமையாக அகற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, இன்னும் ஒரு சில நாட்களில் அவர் தனி வார்டுக்கு மாற்றப்படலாம் என்றும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக தனி அறையும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.