தமிழகத்தில் இன்று தேர்தல் நடந்தாலும் ஜெயலலிதாதான் ஜெயிப்பார்: வைகோ அதிரடி
சென்னை: காவிரி டெல்டாவில் காலார நடந்து கொண்டே மக்களை சந்திக்கிறார் வைகோ. மீத்தேன் ஆய்வுக்கு எதிர்ப்பு... மேகதாதுவின் அணைக்கட்ட எதிர்ப்பு, மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டாலும் அன்பு சகோதரி ஜெயலலிதாவை அவ்வப்போது நினைவு கூற தவறுவதில்லை வைகோ.
ஊழலுக்கு எதிரான தண்டனை கிடைத்த பின்னரும் ஆட்சியை வழிநடத்தும் அன்பு சகோதரி ஜெயலலிதா என்று வார்த்தைக்கு வார்த்தை பேச தவறுவதில்லை.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என்று அதிரடியாக பேசி அனைவருக்குமே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார் வைகோ. ஆனாலும் வருங்காலத்தில் அதிமுக, திமுக உடன் கூட்டணி கிடையாது என்றும் அடித்துப்பேசுகிறார்.
பிரபல இதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியின் சில முக்கிய அம்சங்களை படியுங்களேன்.
தோல்விக்கு வருத்தமில்லை
லோக்சபா தேர்தலில் நான் தோல்வியடைந்ததற்கு வருத்தப்படவில்லை, ஏனென்றால் 2,61,000 மக்கள் எனக்கு வாக்களித்துள்ளனர்.
முதல்வர் ஆசையில்லை
கடந்த 50 ஆண்டு அரசியல் பயணத்தில் வாய்தவறிக்கூட, 'நான்தான் முதலமைச்சர்'னு இதுவரை நான் சொன்னதும் இல்லை; அந்தக் கனவில் நான் இருக்கேன்னு வெளிப்படுத்தினதும் இல்லை. ஆனா, என் தோழர்களுக்கு அந்த ஆசை உண்டு.
அதிமுக, திமுக
இன்று மட்டும் அல்ல, வருங்காலத்திலும் அ.தி.மு.க-வோடும் கூட்டு கிடையாது; தி.மு.க-வோடும் கூட்டு கிடையாது. ஆனால், இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே. இது தொடர்பாக இறுதி முடிவெடுக்க வேண்டியது என் கட்சித் தோழர்கள்தான்.
ஜெயல்லிதாவின் வியூகம்
முல்லைப் பெரியாறு விவகாரத்தில், உண்மையிலேயே அந்த வழக்கை சட்டபூர்வமா நடத்தி வெற்றி பெறவைத்தது ஜெயலலிதாவின் வியூகம்தான். நான் பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவேன்; விமர்சிக்க வேண்டியதை விமர்சிப்பேன்.
ராஜபக்ஷேவின் ஏஜென்ட்
சுப்ரமணியசுவாமி ஜோக்கர் அல்ல. அவரிடம் நல்ல ஆங்கிலப் புலமை இருக்கிறது. சட்டநுணுக்கம் தெரிந்தவர். ஹார்வேர்டில் போய் லெக்சர் தருகிறார். ஆனால், தன் அறிவு அனைத்தையும் அழிவுக்குப் பயன்படுத்தும் மிக மிக ஆபத்தான ஒரு மனிதர். அவர் ராஜபக்ஷேவால் பா.ஜ.கவுக்குள் திணிக்கப்பட்ட ஓர் ஏஜென்ட்.
ஜெயலலிதா ஜெயிப்பார்
தமிழகத்தில் இன்று தேர்தல் நடந்தாலும் ஜெயலலிதாதான் ஜெயிப்பார். காரணம், ஊழல் குற்றச்சாட்டைத் தாண்டி மக்களிடம் அவர் மேல் ஓர் அனுதாபம் இருக்கிறது.
ஓ.பி.எஸ் விவரம் தெரிந்தவர்
ஓ.பன்னீர் செல்வம் திடீரென முதல்வர் ஆனவர் அல்ல அவர். அந்தக் கட்சியில் அடிமட்டத் தொண்டராக இருந்து முன்னேறியவர். அவர், விவரம் தெரியாதவர் அல்ல; நுணுக்கமாகப் பேசக்கூடியவர்; பதில் சொல்லக்கூடியவர். எனவே, அவரை எவரும் கொச்சைப்படுத்த வேண்டாம்.