அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் மனோஜ் பாண்டியன் நீக்கம்- நவநீதகிருஷ்ணன் நியமனம்!!
சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜ்யசபா எம்.பி. மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நவநீதகிருஷ்ணன் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜூலை 3-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளராக நவநீத கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தாம் வகித்து வந்த தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியை வெள்ளிக்கிழமையன்று நவநீதகிருஷ்ணன் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை நேற்று நவநீதகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் திடீரென ராஜ்யசபா எம்.பி. மனோஜ் பாண்டியன், அவர் வகித்து வந்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நவநீதகிருஷ்ணனையே ஜெயலலிதா நியமித்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.எச். மனோஜ் பாண்டியன் எம்.பி, இன்று முதல் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் இன்று முதல் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications