மெரினாவில் பாய்மர படகு அகாடமி: சட்டசபையில் ஜெ.,யின் 110 அறிவிப்பு
சென்னை: உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையான மெரினாவில் பாய்மரப் படகு அகாடமி ஒன்று நிறுவப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில், சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, கதர் கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறைகளின் மானிய கோரிக்கைமீதான விவாதம் இன்று நடைபெற்றது.
கடந்த 17ஆம் தேதி, பேரவை நேரத்தை வீணடிப்பதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 79 திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்படாத 10 திமுக எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள், சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் குரலுக்கு சபாநாயகர் செவிசாய்க்கவில்லை என்பதால் தொடர்ந்து வெளிநடப்பு செய்து வந்தனர். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு வரும்போதுதான் நாங்களும் வருவோம் என்று, சஸ்பெண்ட் செய்யப்படாத 10 திமுக எம்.எல்.ஏ.க்கள் நேற்று முதல் சட்டசபைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, இன்று காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்களும் பேரவைக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
சட்டசபையில் மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தனியரசு மற்றும் கருணாஸ் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருவர்கூட இல்லாமல், சட்டசபையில் மானிய கோரிக்கைமீதான விவாதமும் அதற்கான பதிலுரையும் நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ், விளையாட்டு மேம்பாட்டுக்கான புதிய அறிவிப்புகளை சட்டசபையில் இன்று வெளியிட்டார். அதன் தொகுப்பு:
சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்று வெற்றி பெறுகிற வகையில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
- உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரையான மெரினாவில் பாய்மரப் படகு அகாடமி ஒன்று நிறுவப்படும்.
- தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் விளையாட்டு தொடர்பான பயிற்சிகள் மற்றும் ஆராய்ச்சிகளில் பயன்பெற உதவியாக மின்நூலகம் ஒன்று 2 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
- மதுரை இடையாபட்டியில் தேசிய மாணவர் பயிற்சி அகாடமி அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடைகிற நிலையில் உள்ளன. இங்கு பயிற்சி பெறும் தேசிய மாணவர் படை வீரர்கள் மலையேறும் பயிற்சியில் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக மலையேறும் பயிற்சிக்கான செயற்கை மாதிரி வடிவமைப்பு ஒன்று 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications