எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அதிமுக இயங்கும்- ஜெ., லட்சியம் பலிக்குமா?
நான் இல்லாவிட்டாலும் அதிமுக எண்ணும் இயக்கம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இயங்கும் என்று சட்டசபையில் முழங்கியவர் ஜெயலலிதா. அவரது லட்சியத்தை இப்போது இருப்பவர்கள் நிறைவேற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது. இந்த ஆண்டு பொதுக்குழுவில் பேச அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இல்லை. யார் பொதுச்செயலாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபையில் கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, எங்களுடைய செயல்பாடு, எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான். எங்களை பொறுத்தவரை எந்த சுயநலமும் இல்லை. பொது நலம்தான், மக்கள் நலம்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியை கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்று கம்பீரமாக, ஆணித்தரமாக பேசினார்.
AIADMK General council meet on December 29th. pic.twitter.com/wpvnojEtL6
— AIADMK (@AIADMKOfficial) December 28, 2016
இன்று அவர் இல்லை. அதிமுகவை பிளக்க, சிதைக்க, கரைக்க, அப்படியே கபளீகரம் செய்ய என தனித்தனியாக சில கூட்டங்கள் செயல்படுகின்றன. அதிமுகவை சிதைக்காமல், நூற்றாண்டுகள் கடந்தும் இயங்கும் இயக்கமாக மாற்றுவார்களா? என்பதே எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் கடவுளாக நினைக்கும் அதிமுக தொண்டர்களின் கவலை.
கடந்த 2015 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, செம்பரம்பாக்கம் தண்ணீர் திறப்பு, சென்னை வெள்ளம் பற்றியும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு எப்படி பணியாற்ற வேண்டும் என்று கூறிய ஜெயலலிதா, நம்மிடையே உள்ள வேற்றுமைகளை களைந்து களப்பணியாற்றியிட வேண்டும் என்றார். கடந்த ஆண்டு கம்பீரமாக உரையாற்றிய ஜெயலலிதா இந்த ஆண்டு இல்லை. சரித்திர புகழ் மிக்க வெற்றியை பெற்று விட்டு ஆறு மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்து விட்டு மரணமடைந்து விட்டார். இந்த ஆண்டு பொதுக்குழுவில் ஜெயலலிதா ஆற்றிய முந்தைய உரைகளின் வீடியோ தொகுப்பு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.