திமுக தலைவர் யார் என்பதில் கருணாநிதி- ஸ்டாலின் இடையே குழப்பம்.. போட்டுத்தாக்கும் ஜெ.
சென்னை: திமுகவின் தலைவர் யார் என்பதில் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே குழப்பம் இருப்பதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா விமர்சித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளன; உணவுதானிய உற்பத்தி அதிகரித்துள்ளது என புள்ளி விவரங்களை அடுக்கினார்.
அப்போது கச்சத்தீவு குறித்தும் பேசிய ஜெயலலிதா, கச்சத்தீவை கொடுத்த பிறகு தான் தனக்கு தெரியும் என கருணாநிதி கூறினார்.

ஓடும் திமுகவினர்...
கச்சத்தீவு தொடர்பாக கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார். கச்சத்தீவு பற்றி சட்டசபையில் பேசாமல், வெளியில் இருந்து பேசுகிறார். கேள்விகளுக்கு பயந்து தி.மு.க.வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர். கச்சத்தீவு பிரச்னையை எடுத்தாலே தி.மு.க.,வினர் ஓடுகின்றனர்.

கருணாநிதி வருவாரா?
கச்சத்தீவு விவகாரத்தில் வழக்குப்போடப்போவதாக வாஜ்பாய் சொல்லியும் கருணாநிதி ஏன் முன் வரவில்லை. கச்சத்தீவு குறித்து பதில் அளிக்க கருணாநிதியை திமுகவினர் சட்டசபைக்கு அழைத்து வர வேண்டும். அழைத்துவரத் தயாரா? என்றும் சவால் விட்டார்.

குழப்பம்
இதன் பின்னர் திமுக தலைவர் யார் என்பதில் ஸ்டாலின், கருணாநிதிக்குள் குழப்பம் இருக்கிறது என்றும் விமர்சித்தார் ஜெயலலிதா.

ஓபிஎஸ்
சில நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையிலும், கருணாநிதியிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஸ்டாலின் பறித்துவிட்டார்; தந்தைக்கும் தனயனுக்கும் இடையே குழப்பம் இருக்கிறது என கூறியிருந்தார். அதற்கு ஸ்டாலின், தந்தைக்கும் தனயனுக்கும் இடையே சிண்டு முடிய வேண்டாம் என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications