ஆயிரம் முறை யோசித்து தான் திட்டங்களை செயல்படுத்துகிறேன்.. ஜெயலலிதா உருக்கம்
வேலூர்: எந்த வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்பு ஆயிரம் தடவை யோசிப்பவர்தான் இந்த ஜெயலலிதா. நிறைவேற்ற முடியும் என்றால் மட்டுமே வாக்குறுதி அளிப்பேன் என்று அரக்கோணத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே வேடல் கிராமத்தில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார்.

இதில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கீழ்வைத்தியணான்குப்பம் (தனி), போளூர், ஆரணி, செங்கம் (தனி), கலசபாக்கம் ஆகிய 17 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா வாக்கு சேகரித்தார்.
பிரசாரத்தில் ஜெயலலிதா பேசியதாவது:
திமுக தேர்தல் அறிக்கையில் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதை மறுக்கவில்லை. அதிமுக எப்போதும் எழைகளின் பக்கமே இருக்கிறது. அவர்களை கைதூக்கி விடும் வகையிலும், சொந்த காலில் நின்று வருவாய் ஈட்டும் வகையிலும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிராமப்புற கோவில் பூசாரிகளுக்கு மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் ஜெயலலிதா.
மேலும், இதுவரை என்னையும், அதிமுக ஆட்சியையும் குறை கூறிவந்தவர்கள், தற்போது அதிமுகவின் தேர்தல் அறிக்கையை குறை கூறுகின்றனர்.
எந்த வாக்குறுதியை கொடுப்பதற்கு முன்பு 1000 தடவை யோசிப்பவர்தான் இந்த ஜெயலலிதா. நிறைவேற்ற முடியும் என்றால் மட்டுமே வாக்குறுதி அளிப்பேன். எனவே, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்ற உறுதியை அளிக்கிறேன்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications