விலை நிர்ணயம் செய்யும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியதை ரத்து செய்க: ஜெயலலிதா

இது குறித்து அவர், மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூறியுள்ளதாவது:
''இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்து வருவதை அடுத்து பெட்ரோல் விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ள சூழ்நிலையில், செப்டம்பர் மாதம் முதல் இரு வாரங்களில் ஏற்பட்டுள்ள சராசரி சர்வதேச பெட்ரோல் விலை உயர்வையும், இந்திய ரூபாய் மதிப்பினையும் சுட்டிக் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மீண்டும் லிட்டருக்கு 1 ரூபாய் 63 காசு என்று உயர்த்தியுள்ளதைப் பார்க்கும் போது, 'எரிகிற வீட்டில் பிடுங்கின மட்டும் லாபம்' என்ற பழமொழிக்கேற்ப மத்திய அரசு செயல்படுகிறதோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த மாதம் முதல் தேதி அன்று தான் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 35 காசு உயர்த்தப்பட்டது. இந்தச் சுமையிலிருந்து மக்கள் மீளாத இந்தத் தருணத்தில் மீண்டும் பெட்ரோல் விலையை 1 ரூபாய் 63 காசு என்று உயர்த்தியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது. இந்த 13 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கச்சா எண்ணெயை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அதை இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பெட்ரோலாக மாற்றி மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றது. ஆனால், சர்வதேச அளவில் பெட்ரோல் விலை உயர்வைச் சுட்டிக் காட்டி, உள்நாட்டில் விற்கப்படும் பெட்ரோல் விலையை உயர்த்துவது என்பது நியாயமற்ற செயல் ஆகும்.
மேலும், ஈரான் நாடு இந்திய ரூபாயைப் பெற்றுக் கொண்டே கச்சா எண்ணெயை வழங்குகின்ற சூழ்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை சுட்டிக் காட்டி உள்நாட்டில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலையை உயர்த்துவதும் மக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கு முக்கியக் காரணமாக விளங்கும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்காமல், திரும்பத் திரும்ப பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்பது இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுக்காது.
இது மட்டுமல்லாமல், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தும் போது உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயையும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலையையும் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர, சர்வதேச அளவிலான பெட்ரோலின் விலையை கவனத்தில் கொள்ளக் கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்தப் பெட்ரோல் விலை உயர்வு பண வீக்கத்தை மேலும் அதிகப்படுத்துவதோடு, விலைவாசி உயர்வுக்கும் வழி வகுக்கும்.
எனவே, நாட்டின் நலன் கருதி, மக்களின் நலன் கருதி, தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்தப் பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மீண்டும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications