ஜெ.வின் ரூ.66 கோடி சொத்துக்கு என்ன ஆதாரம்.. 'டீட்டெய்ல்' கேட்ட நீதிபதி – 'டைம்' கேட்ட பவானிசிங்!
பெங்களூரு: ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்து குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.
அப்போது சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையில் இறுதிவாதத்தை தொடங்க மீண்டும் ஒருவார காலம் அவகாசம் கேட்டார் பவானி சிங். இதற்கு மறுத்த நீதிபதி குமாரசாமி உடனடியாக விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்குபேர் தரப்பிலான இறுதிவாதம் கடந்த வாரம் நிறைவடைந்தது.
6 நிறுவனங்கள்
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மெடோ அக்ரோ ஃபார்ம்,ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆதித்யா சோந்தி, குலசேகரன் ஆஜராகி கடந்த 3 நாட்களாக வாதிட்டனர்.
ஆதாரங்கள் என்ன?
இந்த வாதத்தின்போது நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி குவித்ததாக கணக்கிட்டது எப்படி? என்றும், இந்த அளவுக்கு சொத்துக்குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன என்றும், அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு மதிப்பீடு செய்த சொத்து மதிப்பீடு பட்டியல் எங்கே என்றும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் கேள்வி எழுப்பினார்.
பவானிசிங் பதில்
இதற்கு பதில் அளித்த பவானி சிங், சாட்சிகளின் அடிப்படையிலும், குறிப்பிட்ட ஆவணங்களின் படியும் சொத்துக்களை மதிப்பீடு செய்தோம் என்று தெரிவித்தார்.
பட்டியல் தயார்
இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக்களின் மதிப்பீடு பட்டியலை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம் என்றார்.
அவகாசம் கேட்ட பவானிசிங்
இதனையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் தனது இறுதிவாதத்தை தொடங்க மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டார்.
நீதிபதி நிராகரிப்பு
இதனை நிராகரித்த நீதிபதி குமாரசாமி உச்சநீதிமன்ற அறிவுறத்தல் பெயரில் தினந்தோறும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார். ஆகவே இறுதிவாதத்தை உடனே தொடங்குமாறு பவானி சிங்கிற்கு நீதிபதி உத்தரவிட்டார்.
ரூ.66 கோடி எப்படி வந்தது
குற்றவாளிகள் தரப்பு இறுதிவாதம் முடிவு பெற்ற நிலையில் 66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்பது பற்றி அரசு தரப்பு நிரூபிக்க வேண்டியது கட்டாயம் என்று நீதிபதி குறிப்பிட்டார். இல்லையெனில் நீதிமன்றமே இந்த தொகை எப்படி வந்தது என்பது பற்றி கணக்கிட்டு தீர்ப்பளிக்க நேரிடும் என்று கூறியதோடு, சொத்துக்களை மதிப்பீடு செய்தற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் மற்றும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
மார்ச் மாதம் தீர்ப்பு
நீதிபதியின் உத்தரவை அடுத்து பவானிசிங் தனது இறுதிவாதத்தை தொடங்கியுள்ளார். அவர் வரும் வாரத்தில் தனது வாதத்தை முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வரும் மார்ச் மாதம் நீதிபதி குமாரசாமி சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தனது தீர்ப்பை வழங்குவார் என கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications