Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டீசல் விலையை உயர்த்தி ஏழைகளின் வயிற்றில் அடிப்பதா?: ஜெயலலிதா கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டீசல் விலை உயர்வு மக்கள் வயிற்றில் அடிக்கும் கொடூரச் செயல் என மத்திய அரசுக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார். உடனடியாக விலை உயர்வை திரும்ப பெறுவதோடு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட விலை நிர்ணய அதிகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Jayalalithaa demands rollback in diesel price hike

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

சர்வதேச சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை காரணம் காட்டி, 'பணவீக்கம்' என்னும் விஷச் சுழலை வேகப்படுத்தக் கூடிய பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு அடிக்கடி உயர்த்திக் கொண்டே வருவது 'கடுகு போன இடம் ஆராய்வார்; பூசணிக்காய் போன இடம் தெரியாது' என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

அந்த வகையில், நேற்று (31.1.2014) நள்ளிரவு முதல் டீசல் விலையை லிட்டருக்கு 50 காசு என மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதையும் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் ஆறாவது முறையாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் உயர்த்தப்பட்டுள்ளன.

தேவையற்ற சுமை

நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் டீசல் விலையை இவ்வாறு மாதந்தோறும் உயர்த்துவது, ஏழை எளிய மக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுவது ஆகும். இந்தியாவில் நடைபெறுவது மக்களாட்சியா அல்லது மன்னராட்சியா என்று பொதுமக்கள் நினைக்கும் அளவுக்கு, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. மத்திய அரசின் மக்கள் வயிற்றில் அடிக்கும் இந்த கொடூரச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விலைவாசி உயரும்

நாட்டின் இன்றியமையாதப் பொருட்களாக விளங்குவது பெட்ரோலியப் பொருட்கள். பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையோடு பெட்ரோலியப் பொருட்கள் பின்னிப் பிணைந்துள்ளன. தற்போது உயர்த்தப்பட்டுள்ள டீசல் விலை உயர்வு என்பது வேளாண்மை துறை, உற்பத்தி துறை உட்பட அனைத்துத் துறைகளையும் கடுமையாக பாதிப்பதோடு, மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரவும் வழிவகுக்கும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்வதால், மாத வருவாய் பெறுவோர், தினக்கூலி அடிப்படையில் பணிபுரிவோர் உட்பட ஏழை எளிய நடுத்தர மக்கள் பெருத்த துயரத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

விலை உயர்வு நியாயமற்றது

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் இது போன்ற பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு நியாயமற்றது, எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இது போன்ற விலை உயர்வு 'எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்' என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.

திரும்ப பெறுக

டீசல் மற்றும் பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு வழங்கியதையடுத்து, டீசல் விலையை மாதாமாதம் உயர்த்திக் கொண்டே வருவது, 'நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்' என்ற பழமொழிக்கேற்ப அமைந்துள்ளது.எனவே, பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் இந்த டீசல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்

அதிகாரத்தை ரத்து செய்க

எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணய அதிகாரத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்'' எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+