அதிமுக சட்டசபைக்குழு தலைவராக ஜெயலலிதா தேர்வு!
சென்னை: அதிமுக சட்டசபைக் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா.
தமிழக சட்டசபைக்கு கடந்த 16ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனையடுத்து, வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில், 134 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.

இதனையடுத்து சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, அதிமுக தலைமை அலுவலகத்தில்,அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜெயலலிதாவைத் தவிர கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் உட்பட 133 பேரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் அனைவரும் அதிமுக சட்டசபை குழு தலைவராக ஜெயலலிதாவை, ஒரு மனதாக தேர்வு செய்தனர். கூட்டம் முடிந்ததும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், ஜெயலலிதாவை தேர்வு செய்வதற்கான கடிதத்தை, ஆளுநரிடம் வழங்குவர். அதன்பின், அவர் ஆட்சி அமைக்க வரும்படி, ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுப்பார்.
இதனையடுத்து தமிழக முதல்வராக 6வது முறையாக ஜெயலலிதா பதவியேற்பார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றுக்கொள்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு இதே மே மாதம் 23ம் தேதி தமிழக முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications