மதுரையில் ஜெயலலிதா இன்று பிரசாரம்: 4 மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார்
மதுரை: மதுரை உள்ளிட்ட 4 மாவட்ட அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் இன்று கலந்து கொள்கிறார்.
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு மாவட்டங்களில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்குச் சேகரிப்பதற்கான தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் மதுரையில் இன்று நடைபெறுகிறது.

இதற்காக மதுரை - சிவகங்கை சாலை சந்திப்பு சுற்றுச்சாலை அருகே பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலின்போதும் இதே இடத்தில்தான் முதல்வர் பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது.
அதேபோல, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றதற்காக 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவும் இங்குதான் நடைபெற்றது. இதனால், ராசியான அந்த இடத்தை மீண்டும் தேர்வு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவின் வருகையொட்டி மதுரை - சிவகங்கை சாலை சந்திப்பு அருகே உள்ள மாநகராட்சியின் பழைய சுங்கச்சாவடி அருகே இருந்து பனை ஓலைகளால் அலங்கரிக்கப்பட்ட தோரண வாயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக் கூட்டம் நடைபெறும் பகுதியில் இருந்து விமான நிலையம் வரை சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு முதல்வர் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் பொதுக் கூட்ட மேடைக்கு மாலை 5 மணிக்கு வரவுள்ளார். கூட்டம் முடிந்து மீண்டும் விமானத்தில் சென்னை திரும்புகிறார் என்று கட்சியினர் தெரிவித்தனர்.
முதல்வர் வருகையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டுள்ள இடம், விமான நிலையத்தில் இருந்து முதல்வர் வரும் வழிப்பாதை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி திரிபாதி நேற்று ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications