சு.சுவாமி மீது மேலும் 2 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார் முதல்வர் ஜெயலலிதா!
சென்னை: பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மீது மேலும் 2 அவதூறு வழக்குகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து டைம்ஸ் ஆப் இண்டியா, தினமலர் நாளேடுகளுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டியளித்திருந்தார்.
அதேபோல் ட்விட்டர் சமூக வலைதளத்திலும் தீவிரவாதிகளின் நண்பனாக ஜெயலலிதா அரசு செயல்படுகிறது என்று பதிவிட்டிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

3 அவதூறு வழக்குகள்
இதனால் சு.சுவாமி மீதும் நாளேடுகளின் ஆசிரியர்கள் மீதும் அடுத்தடுத்து 3 அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்த வழக்குகளில் அக்டோபர் 1-ந் தேதி சுப்பிரமணியன் சுவாமி ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இடைக்கால தடை
இதனிடையே டைம்ஸ் ஆப் இண்டியா நாளேட்டின் ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், தாம் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க கோரியிருந்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சுப்பிரமணியன் சுவாமி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

2 வழக்குகள்
இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று சுப்பிரமணியன் சுவாமி மீது மேலும் 2 அவதூறு வழக்குகளை முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில்...
சமூக வலைதளங்களில் முதல்வர் ஜெயலலிதாவை சுப்பிரமணியன் சுவாமி மிக மோசமாக விமர்சித்திருந்ததாக அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அவதூறு
அண்மையில் சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில், ஜெயலலிதாவுக்கு ஜெயில் என்று குறிப்பிட்டு மிக மிக மோசமான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications