நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் நீடுழி வாழ்க... சரத்குமாருக்கு ஜெ. வாழ்த்து
சென்னை: 61வது பிறந்தநாளைக் கொண்டாடும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாருக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று தனது 61வது பிறந்த நாளை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் ‘கேக்' வெட்டி கொண்டாடினார்.
அவருக்கு முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் வாழ்த்தை கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
61-வது பிறந்த நாளை கொண்டாடும் தங்களுக்கு என் உளம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கலை ஆர்வம் மிக்கவராய் திரைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்து வருவதோடு மட்டுமல்லாமல் அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறந்த பணியாற்றி வரும் தாங்கள் நீண்ட ஆயுளுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி அனைத்து வளமும், நலமும் பெற்று நீடுழிவாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு என் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறேன்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், சரத்குமாருக்கு மதுரை ஆதீனம், முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நடிகர்கள் விஜயகுமார், ராதாரவி, சார்லி, நடிகைகள் நளினி, குயிலி, சமத்துவ மக்கள் கட்சி துணைத்தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், பொருளாளர் சுந்தரேசன், தலைமை நிலைய செயலாளர் ஐஸ்அவுஸ் தியாகு ஆகியோர் நேரில் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும், மக்கள் தொடர்பாளர் சிங்காரவேலன், மண்டல செயலாளர் சேவியர், மாவட்ட செயலாளர்கள் சி.ராஜா, பிரசாத், உதயகுமார், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பி.ஆர்.ஆர்.சுந்தர், வேளச்சேரி பகுதி துணை செயலாளர் ஆனந்த விநாயகம், மாநில வர்த்தகர் அணி செயலாளர் நாதன், துணை செயலாளர் பாபு, சென்னை கிழக்கு இளைஞர் அணி செயலாளர் பால்.மாரிமுத்து, துணை செயலாளர் ஜோ.மாரிசெல்வம், வேளச்சேரி கிழக்கு பகுதி செயலாளர் மதன், மேற்கு பகுதி துணை செயலாளர் ஏரல் முகேஷ் உள்ளிட்டோரும் சரத்குமாரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்கள்.
பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார் சரத்குமார். அப்போது அவர் கூறியதாவது:-
'சாதி சமயமற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதே என் பிறந்த நாள் செய்தியாகும். அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ வேண்டும். சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நலப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தென்காசி தொகுதியில் மாதம் தோறும் பத்து நாட்கள் தங்கி மக்கள் குறைகள் கேட்கிறேன். 2016 தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும்' என்றார்.












Click it and Unblock the Notifications