அப்பல்லோவில் தொடர் சிகிச்சையில் ஜெயலலிதா.. சிங்கப்பூர் பெண் மருத்துவர்கள் வந்த ரகசியம்
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து நேற்று இரண்டு பெண் டாக்டர்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இயந்திரத்தின் மூலம் பிசியோ தெரபி சிகிச்சை அளிப்பது எப்படி என்று பயிற்சி அளிக்கவே இந்த சிங்கப்பூர் மருத்துவர்கள் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 22ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பேல் ஆகியோரோடு அப்பல்லோ மருத்துவக் குழுவினர் இணைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிங்கப்பூர் டாக்டர்கள்
இந்நிலையில் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து இரண்டு பெண் டாக்டர்கள் நேற்று சென்னை வந்துள்ளனர். இருவரும் பிசியோதெரபி அளிப்பதில் உலகப் புகழ் பெற்றவர்கள். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வந்த இதுவரையிலான சிகிச்சைகளின் விவரங்களை அறிந்துகொண்டு அடுத்தக்கட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள உள்ளனர்.
பிசியோதெரபி பயிற்சி
ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை தரப்படுகிறது. அதனுடன் பேசிவ் பிசியோதெரப்பி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை ஏற்கனவே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் உடல் நிலை கருதி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தால் இந்த பயிற்சிகள் முழுமையாக அளிக்க முடியவில்லை.
கிருமி தொற்று
ஜெயலலிதாவிற்கு கிருமி தோற்று ஏற்படாமல் இருக்க அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டில் இதுவரை பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. டாக்டர்கள் அடிக்கடி சென்று பயிற்சிகள் அளிக்கும் போது, நோய் தொற்று அதிகரிக்கக் கூடிய சூழலும் உருவாகும். எனவே ஜெயலலிதாவிற்கு சிறந்த முறையில் பயிற்சிகள் அளிப்பதற்காக நிர்வாகம் ஒரு புதிய எந்திரத்தை வாங்கியுள்ளது. அதன் மூலம் மனிதர்கள் உதவி இல்லாமல் முதல்வருக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
இயந்திரம் மூலம் சிகிச்சை
இந்த எந்திரத்தை இயக்குவதற்கு ஒரே ஒரு டாக்டர் மட்டும் போதும். அந்த எந்திரத்தை எப்படி இயக்குவது என சொல்லிக்கொடுப்பதற்கு சிங்கப்பூரில் இருந்து எந்திரத்தை தயாரித்த கம்பெனி, டாக்டர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது. இது தான் சிங்கப்பூர் டாக்டர்கள் சென்னைக்கு வந்ததன் ரகசியம் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.