ரூ.1000 மதிப்பில் 16 பொருட்களுடன் “அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகம்”... ஜெ. இன்று தொடங்கி வைக்கிறார்
சென்னை: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பில் 16 வகையான பொருட்களை வழங்கும் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சட்டசபையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்' என்ற திட்டத்தை அறிவித்தார். அதன் படி, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ரூ.1,000 மதிப்பில் 16 வகையான பொருட்களுடன் அம்மா குழந்தைநல பரிசுப்பெட்டகம் வழங்கப்படும்.
அந்தப் பரிசுப் பெட்டகத்தில், குழந்தை பராமரிப்பு துண்டு, குழந்தை உடை, குழந்தை படுக்கை, குழந்தை பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ, சோப்பு பெட்டி, சோப்பு, நகவெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி லிட்டர் அளவு கைகழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சவுபாக்கியா' சுண்டிலேகியம் என மொத்தம் 16 பொருட்கள் இருக்கும்.
இந்த திட்டத்தை இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க இருக்கிறார்.