லோக்சபா தேர்தல்: நாளை முதல் ஜெயலலிதா சூறாவளி பிரசாரம்
சென்னை: அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நாளை முதல் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த 24-ந் தேதி ஜெயலலிதா அறிவித்தார். 25ந் தேதி அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போதே தேர்தல் பிரசார சுற்றுப் பயணத் திட்டத்தையும் ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து, திட்டமிட்டபடி நாளை தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்குகிறார். இதற்காக நாளை பகல் 2.30 மணியளவில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார். நசரத்பேட்டையில் ஹெலிகாப்டரில் இறங்கி கார் மூலம், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.
காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பேசுகிறார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் சென்னை திரும்புகிறார்.
முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரம் தேர்தல் பிரசாரத்துக்கு வருவதையொட்டி அவரது ஹெலிகாப்டர் இறங்கும் நசரத்பேட்டையில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை கொடி தோரணங்கள் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வாழை மர தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மைத்ரேயன் எம்.பி. மேற்பார்வையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications