தமிழக மீனவர்களின் வாழ்வாதார விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் - மோடிக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதார விவகாரத்தில் நிலையான தீர்வு காண, தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இலங்கை வசம் உள்ள 73 மீனவர்கள்,101 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''பாக்ஜலசந்தி கடல் எல்லையை அடுத்த கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்து நான் கடந்த கடிதங்களில் பலமுறை தெரிவித்துள்ளேன். இருப்பினும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களை கைது செய்யப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும், தொடர்ந்து தொய்வில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி 3 படகுகளில் 16 மீனவர்கள் சென்றனர். இவர்களை, அன்று அதிகாலை கைது செய்த இலங்கை கடற்படையினர் இலங்கையின் காங்கேசன் துறையில் அடைத்துள்ளனர். இதுவரை கைது செய்யப்பட்டு இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 73- ஐ எட்டியுள்ளது.
கடந்த 1974, 76-ம் ஆண்டுகளில் அரசியல் சட்டத்துக்கு முரணாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தகுந்த சட்ட விளக்கங்களுடன் நான் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
எனவே, இந்திய -இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோடு முடிந்து விட்ட விவகாரமாக மத்திய அரசு கருதக்கூடாது என்பதே தமிழகத்தின் நிலைப்பாடாகும். எனவே, கச்சத்தீவை மீட்பது ஒன்றே, தமிழக மீனவர்கள் பாக்ஜல சந்தியில் தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன்பிடித்து, வாழ்வாதார உரிமையை அமைதியான முறையில் பெற முடியும். இந்த பிரச்சினைக்கும் நிரந்தரமாக தீர்க்க முடியும்.
மேலும், இலங்கை அதிகாரிகள், தமிழக மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை விடுவிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இது வேதனைக்குரியதாகும். அவை பழுதடைந்து, தமிழக ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. பல காலமாக பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டுள்ள படகுகள், மீன்பிடி சாதனங்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவை தமிழக மீனவர்களுக்கு மிகுந்த நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே, மத்திய அரசு விரைவில் அந்த படகுகளை மீட்டு, இங்கு கொண்டுவந்து மீனவர்கள் பயன்டுத்தும் வகையில் சீரமைத்து வழங்க வேண்டும்.
மேலும், தமிழக மீனவர்களின் உரிமைகள் மற்றும் விருப்பங்களை தூதரக ரீதியில் இலங்கை அரசிடம் கடுமையாக மத்திய அரசு எடுத்துரைக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். தமிழக மீனவர்களின் வாழ்வாதார விவகாரத்தில் நிலையான தீர்வு காண, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக நீங்கள் உத்தரவிட வேண்டும்.
மேலும், நேரடியாக தலையிட்டு 73 மீனவர்கள் மற்றும் 101 படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போதைய நிலை வருங்காலங்களிலும் தொடரா வண்ணம், உறுதியான, நிலையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.