ஜெயலலிதாவும் செப்டம்பர் 27ம்... - மறக்கமுடியுமா?
செப்டம்பர் 27ஆம் தேதி அதிமுக தொண்டர்களின் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னை: 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா, 2015 ஆம் ஆண்டு வழக்கில் இருந்து விடுபட்டு செப்டம்பர் 27ஆம் நாள் முதல்வராக பதவியில் இருந்தார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் அப்பல்லோ மருத்துவமனையில் கிரிட்டிக்கல் கேர் யூனிட்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்பல்லோ மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
சிகிச்சை பலனிக்காமல் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்த ஜெயலலிதா இந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி மெரீனா கடற்கரையில் மீளாத்துயில் கொண்டிருக்கிறார்.
பெங்களூரு சிறையில் ஜெயலலிதா
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 27 ஆம் நாளில்தான் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றார். இதனையடுத்து அவருடைய முதல்வர் பதவி பறிபோனது.
முதல்வரான ஜெயலலிதா
அடுத்துவந்த மூன்று மாதங்களும், ஜெயலலிதா சிறையில் இருந்தார். அக்டோபர் மாதம் ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா 2015ஆம் ஆண்டு மே மாதம் விடுதலையானார். மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
செப்டம்பர் 27, 2016
கடந்த ஆண்டு இன்றையத் தேதியில் (செப்டம்பர் 27) ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவனையில் தீவிர சிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறப்பட்டாலும் அவருக்கு 18 வகையான மருத்துவப் பரிசோதனைகள் எடுக்கப்பட்டன.
தவமிருந்த தொண்டர்கள்
அப்பல்லோ மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் தவமிருந்தனர். ஜெயலலிதா உடல் நலமடைய பிரார்த்தனைகள் செய்தனர். ஆனால் எந்தவித பலனுமில்லை டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார் ஜெயலலிதா.
2017, செப்டம்பர் 27
ஜெயலலிதா மரணமடைந்தாலும் அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள் விலகவில்லை. மரணத்தை பற்றி விசாரிக்க தற்போது நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
மெரீனா கடற்கரையில் ஜெ.,
மெரீனா எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளார் ஜெயலலிதா. அதிமுக தொண்டர்கள் தினசரியும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் பெருமாள் பக்தையான ஜெயலலிதாவின் வாழ்க்கையை புரட்டித்தான் போட்டிருக்கிறது.