மோடியை சந்திக்க ஜூன் 14-ல் ஜெ. டெல்லி பயணம்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வரும் 14-ந் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியிடம் தமிழக நலன்களுக்கான கோரிக்கை பட்டியலை கொடுத்த அன்றே ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக அதிமுக ஆட்சியமைத்துள்ளது. கடந்த 23-ந் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
முதல்வராக பதவியேற்றவர்கள் டெல்லிக்கு சென்று பிரதமர் மற்றும் முக்கியத் துறைகளின் மத்திய அமைச்சர்களை சந்திப்பது வழக்கம். இதன்படி 6-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா வரும் 14-ந் தேதி டெல்லிக்கு செல்ல சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
பிரதமர் மோடியிடம் தமிழக நலன்கள் தொடர்பான கோரிக்கை மனுவையும் ஜெயலலிதா அளித்துவிட்டு அன்றைய தினமே சென்னை திரும்புகிறார்.
லோக்சபாவில் 37, ராஜ்யசபாவில் 13 என நாடாளுமன்றத்தில் 50 எம்பிக்களுடன் பாஜக, காங்கிரஸுக்கு அடுத்து 3-வது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. அண்மையில் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் அதிமுகவுடம் இடம்பெறலாம் எனவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
மோடியை சந்திக்க ஜூன் 14-ல் ஜெ. டெல்லி பயணம்! https://t.co/3kfkc6xZL2 #Jayalalithaa #NarendraModi pic.twitter.com/Edg8O3xZht
— Oneindia Tamil (@thatsTamil) June 8, 2016
50 எம்பிக்கள், 133 எம்எல்ஏக்கள் இருப்பதால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக இருக்கும். ஆகையால் அதிமுகவை மத்திய அமைச்சரவையில் சேர்க்க பாஜக முயற்சித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் டெல்லி பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.