ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டு சிகிச்சை அவசியமா..? அப்பல்லோ சொல்வதை பாருங்கள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குணமடைந்து வருவதால் அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவேண்டிய அவசியம் இல்லை என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

சிங்கப்பூர் செய்தி
இந்நிலையில், ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி கூறிய நிலையில், சில ஆங்கில ஊடகங்கள், ஜெயலலிதா சிங்கப்பூர் செல்ல உள்ளதாகவே செய்திகள் வெளியிட்டன.

அதிகாரி பேட்டி
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் நேற்று அளித்த பேட்டி: ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நாங்கள் உடனடியாக சிகிச்சை அளித்தோம். மறுநாள் காய்ச்சல் குணப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா வழக்கம்போல் உணவு சாப்பிட்டார்.

உணவு சாப்பிடுகிறார்
தொடர்ந்து அவரை நாங்கள் கண்காணித்து வருகிறோம். தேவையான மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் அவருக்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கு தேவையான மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகின்றன. ஜெயலலிதா வழக்கமான உணவை சாப்பிடுகிறார்.

வெளிநாடு செல்லவில்லை
அதே சமயத்தில் சமூக ஊடகங்களில் ஜெயலலிதா உடல்நலம் குறித்து தவறான தகவல்கள் வெளியாகின. மேலும் தொடர் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இது முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது ஆகும். ஜெயலலிதா வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இல்லை.

சில தினங்களில் திரும்புவார்
சிகிச்சைக்கு முதல்வர் ஜெயலலிதா முழு ஒத்துழைப்பு தருகிறார். அவருடைய உடல்நிலை குணம் அடைந்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு இன்னும் சில தினங்களுக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் அவர் இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார். இதைதொடர்ந்து அவருடைய வழக்கமான அலுவலக பணிகளை தொடருவார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications