இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜெ.தான்: அதிமுக பொதுக்குழு
சென்னை: இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற ஆட்சியை வழங்கும் திறமை உடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதான் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவின் நீண்ட நெடிய அனுபவம் காரணமாக, தமிழகம் பல்வேறு துறைகளில் எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்குகிறது. தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

இலங்கை, அமெரிக்கா, சீனா விவகாரங்கள்..
இலங்கைத் தமிழர்களின் சம உரிமைக்காகவும் நீதிக்காகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்திய நாட்டின் நலனுக்கு விரோதமான இந்திய அமெரிக்க எரிசக்தி ஒப்பந்தம், சீனாவின் ஊடுருவல், தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அராஜகச் செயல்கள் ஆகியவற்றை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா.

மாநில உரிமைகள் காப்பவர்
அவர் இந்திய கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை மதிப்பவர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் காப்பாற்றுவதன் வழியாகவே, ஒன்றுபட்ட இந்தியா வலிமையோடு திகழ முடியும் என்பதில் அசைக்க முடியாதநம்பிக்கை கொண்டவர். இளைய தலைமுறையினர் ஊக்குவிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு சம வாய்ப்பு தரப்பட வேண்டும், அதன் வழியாக இந்திய நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடன் இருப்பவர்

ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜெ.தான்
இந்திய நாட்டுக்கு உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்திலிருந்து ஒருவர் தலைமை ஏற்க காலம் கனிந்திருக்கிறது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற ஆட்சியை வழங்கும் திறமை உடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம், எம்.ஜி.ஆரின் பூரண நல்லாசியைப் பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.

இந்தியாவை வல்லரசாக மாற்றுவார் ஜெ.
உலக அரங்கில், இந்தியாவை தலை நிமிரச் செய்யும் நிர்வாகத்தை வழங்கும் ஆற்றல், முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. உலகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

40-லும் தனித்து வெல்வோம்
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், இந்திய நாட்டு வரலாற்றில் மிக இன்றியமையாத தேர்தலாக அமையும். ஊழல், பணவீக்கம், விலைவாசி உயர்வு, கறுப்புப்பண பதுக்கல் போன்றவற்றால், இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றி பெற்றால் மட்டுமே, தேசத்தின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இயலும். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உள்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும், அதிமுக தனித்து நின்று வெற்றி பெற வேண்டுமென்பதே நமது இலக்கு.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications