ஜெ.வின் 40 தொகுதி கனவு பலிக்காது: ஆங்கிலத்தில் பேசி அசர வைத்த பிரேமலதா விஜயகாந்த்!
உளுந்தூர்பேட்டை: லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளையும் வெல்வோம் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கனவு பலிக்காது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலா கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பேசிய பிரேமலதா அவ்வப்போது ஆங்கிலத்தில் பேசி தொண்டர்களை அசர வைத்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே எறஞ்சியில் நேற்று தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டம் என்றைக்கும் தே.மு.தி.க. கோட்டை என்பது இப்போது நிரூபணம் ஆகிவிட்டது.
தலை வணங்குகிறேன்.
தமிழகம் முழுவதும் இருந்தும் இங்கு திரண்டு வந்து இருக்கும் தொண்டர்களை பார்க்கும் போது தானாகவே எனது தலை வணங்குகிறது. ‘திரண்டு வாருங்கள்‘ என்று விஜயகாந்த் சொன்ன வார்த்தையை ஏற்று தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்து அலைகடலாக காட்சி அளிக்கிறீர்கள். இந்த மாவட்டத்தில் கடல் இல்லையே என்ற குறையை தீர்க்கும் வகையில் கடலா..கடல் அலையா..!. என வியக்கும் வகையில் திரண்டிருக்கிறீர்கள்..
லஞ்சம்- ஊழல் இல்லா ஆட்சி..
ஊழல் எதிர்ப்பு மாநாடு என்பது இதயத்தில் இருந்து வந்த வார்த்தை. ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை தே.மு.தி.க. மட்டும்தான் தர முடியும்.
பிரதமரை தீர்மானிப்பார்
வருகிற லோக்சபா தேர்தலில் நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் சக்தி விஜயகாந்திடமே உள்ளது.
அவதூறு பேசினால் அமைச்சர் பதவி
சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் விஜயகாந்தை அவதூறாக பேசும் எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள்.
துரோகம் செய்தால் அண்ணா விருது
விஜயகாந்துக்கு துரோகம் செய்தவருக்கு அண்ணா விருது கொடுக்கிறார்கள். இது போன்ற காட்சிகள் எல்லாம் மாற வேண்டும்.
ஜெ. கனவு பலிக்காது
40 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்கிறார் ஜெயலலிதா. அனேகமாக 4 தொகுதிகள் வேண்டுமானால் கிடைக்கலாம் அவர் பிரதமர் கனவு காண்கிறார். அந்த கனவு ஒருபோதும் பலிக்காது..
உடைக்க முயற்சி
தே.மு.தி.க.வை உடைக்கப் பார்க்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.. அப்படிப்பட்ட துரோகிகளை தே.மு.தி.க.வும், தொண்டர்களும் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
ஆங்கிலத்தில் அசத்தல்.
இடையே இடையே திடீரென ஆங்கிலத்திலும் ஓரிரு வரிகளை பிரேமலதா விஜயகாந்த் பேச கூட்டம் ஆர்ப்பரித்தது.