ஜெயலலிதாவை சுற்றி நிறைய மர்மங்கள்..: உள்துறை அமைச்சகத்திற்கு சசிகலா புஷ்பா கடிதம்
சென்னை : முதல்வர் உடல்நலமில்லாமல் இருப்பதைப் பயன்படுத்தி, சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. அவற்றின்மீது உறுதியான நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் சூழ்நிலையைப் பயன்படுத்தி துணை முதல்வர் பதவி உள்பட முக்கிய முடிவுகளை எடுத்தால், அதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர், முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதாவின் கையெழுத்து அவசியம். கட்சி சார்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டால், அந்தக் கையெழுத்து முதல்வருடையது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.கவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டுவிட்டாலும், அதுதொடர்பான கடிதத்தை ராஜ்யசபா செயலரிடம் அ.தி.மு.க நிர்வாகிகள் இன்னமும் அளிக்கவில்லை. இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மகாராஷ்ட்டிர ஆளுநரும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநருமான வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு கடிதம் எழுதி பரபரப்பை பற்ற வைத்துள்ளார் சசிகலா புஷ்பா.

முக்கிய முடிவுகள்
தமிழக முதல்வரைச் சுற்றிலும் சிலர் இருக்கிறார்கள். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் முதல்வர். அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி துணை முதல்வர் பதவி உள்பட முக்கிய முடிவுகளை எடுத்தால், அதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவின் கையெழுத்து அவசியம்.

நடவடிக்கை தேவை
கட்சி சார்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டால், அந்தக் கையெழுத்து முதல்வருடையது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். முதல்வர் கையெழுத்தை தவறாகப் பயன்படுத்தியிருந்தால், அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கும் அனுப்பி வைத்திருக்கிறாராம்.

காவல்நிலையத்தில் ஆஜர்
பாலியல் புகாரில் முன்ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சசிகலா புஷ்பாவுக்கு பதில் போலியாக கையெழுத்திட்டதாக கூறி நடை பெற்றுவரும் வழக்கில், சசிகலா புஷ்பா இன்று மதுரை புதூர் இ.1 காவல்நிலையத்தில் ஆஜரானார். மதுரை விமான நிலையத்தில் இருந்து காவல்நிலையத்துக்கு வந்த சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர், "தமிழக முதல்வர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் பல நாட்களாக உள்ளார். மிகவும் வருத்தத்துக்குரிய விசயமாக பார்க்கிறேன் என்று கூறினார்.

மக்கள் குழப்பம்
முதல்வர் அவர்களின் உடல்நிலை பற்றி இன்னும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை. தொடர்ந்து பல நாட்களாக எந்த ஒரு தகவலும் முழுமையாக வெளியிடாததால் மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். சில நாட்களாக சற்று உறுதியான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் மக்களின் மனதில் இன்னும் நம்பிக்கை வரவில்லை. அதனால் மக்கள் பிரதிநிதியாக கட்சியின் முக்கிய நபர்கள் செயல்பட்டு முதல்வரை பற்றிய தகவல்களை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முதல்வரை சந்திப்பேன்
முதல்வர் விரைவாக குணமடைந்து மக்களுக்கு மீண்டும் தனது பணியை தொடர வேண்டும். எம்.பி. என்ற முறையில் நான் அவரை பார்த்து உடல்நிலை பற்றி விசாரிக்க வேண்டும். ஆனால் எனது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் இருக்கிறது. எனக்கு முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவரை சந்திப்பது சாத்தியம் இல்லை. இல்லாவிட்டால் நான் முதல்வரை சந்தித்துவிடுவேன்.

குணமடைய வாழ்த்துக்கள்
முதல்வரை சந்திக்க பல கட்சியினரும், முக்கியமான அதிகாரிகளும் வருகிறார்கள். ஆனால் ஒரு கும்பல் முதல்வரை சந்திக்க விடுவதில்லை. அவருக்கு கொடுக்கும் கடிதங்களை கூட வெளியே தள்ளுகின்றனர். இந்த போக்கு முற்றிலும் கண்டிக்கத்தக்கது. முதல்வர் விரைவாக குணமடைய எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன் என்றும் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications