முதல்வர் நலம்... அதிமுக தொண்டர்களின் கவலை விரைவில் தீரும் - வைகோ
சென்னை: அப்பல்லோவில் சிசிக்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார். அதிமுக தொண்டர்களின் கவலை விரைவில் தீரும் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 வாரத்திற்கும் மேலாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்த்து நலம் விசாரிக்க ஏராளமான அரசியல் பிரமுகர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு விடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால் யாரும் முதல்வரை சந்திக்க முடியவில்லை.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் முதல் ராகுல் காந்தி வரை பலரும் அப்பல்லோவிற்கு வந்து மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் ஜெயலலிதாவைக் காண அப்பல்லோவிற்கு சென்றார். அங்கு மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து தகவல் கேட்டறிந்தார்.
அரைமணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் மருத்துவர்களிடம் பேசிய வைகோ, பின்னர் செய்தியாளர்களிடம் தான் விசாரித்தவற்றை விவரித்தார்.
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். லண்டன் மருத்துவர், பிரபல மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நன்றாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். விரைவில் நலம் பெற்று வீடு திரும்புவார்.
கடந்த 22ம் தேதி முதல் அதிமுக தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். அவர்களின் கவலை விரைவில் தீரும். காவிரி பிரச்சினைக்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. இந்த நேரத்தில் அவரது உடல் நிலை இப்படியாகிவிட்டதே என்று நான் வேதனையடைந்தேன். ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என்பதே என் பிரார்த்தனை என்றும் வைகோ கூறினார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா முழு உடல் நலம் பெற வேண்டும் என கூறினார். அப்போலோ மருத்துவமனையும் தெளிவான அறிக்கை அளித்து வருவதாகவும் வைகோ தெரிவித்தார். மேலும் இந்திய இயறையான்மைக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக வைகோ குற்றம் சாட்டினார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.